Monday 22 August 2011

தந்குதூரி பிரகாசம் பந்துலு


தந்குதூரி பிரகாசம் பந்துலு


கோபாலகிருஷ்ண - சுப்பம்மா தம்பதிகளுக்கு, குண்டூர் அருகிலுள்ள கனபருத்தி கிராமத்தில் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு பிறந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் ஹனுமந்தராவ் நாயுடு என்ற ஆசிரியரின் உதவியால் கல்வி பயின்றார். பின்னர் மதராசபட்டினத்துக்கு வந்து, சட்ட படிப்பை முடித்தார்.
ராமச்சந்திர ராவ் என்ற ஜமீன்தார் பண உதவி செய்ய முன்வந்ததால், பிரகாசம் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1907ம் ஆண்டு மதராசபட்டினத்துக்கு புலம் பெயர்ந்து, தொழிலில் மேன்மையுற்று செல்வம் சேர்த்தார்.
கல்கத்தா காங்கிரஸ் செஷனில் பங்கேற்ற போது அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. மதராசபட்டினம் திரும்பியவுடன், காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட அழைப்பை ஏற்று, தனது நல்ல தொழிலை விட்டு விட்டு, இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபடும் முயற்சியில் இறங்கினார்.

பிரகாசம் ஆங்கிலேயருக்கு எதிராக 'ஸ்வராஜ்யா' என்ற ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பித்து நடத்தினார். பின்னர் மதராசபட்டினத்து காங்கிரஸ் தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927ம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் முன் மார்பைக்காட்டி 'முடிந்தால் என்னைச் சுடு' என்றார். அன்றிலிருந்து பிரகாசம் ஆந்திர கேசரி (சிங்கம்) என்றழைக்கப்பட்டார்.

1930
ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் பிரகாசம் பங்கேற்றதால் ராஜாஜியுடன் சேர்த்து சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ராஜாஜியின் மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக பதவியேற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். 1946ம் ஆண்டு மதராஸ் ராஜதானியின் இடைக்கால அரசுக்கு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கங்கிரசுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரஜா என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் காங்கிரசுக்கு திரும்பிய பிரகாசம் ஆந்திர மாகாணம் உருவானபோது அதன் முதல் முதல்வராக பதவியேற்றார். இறுதியில் பிரகாசம் பந்துலு அவர்கள் 1957ம் ஆண்டு, மே 20ம் தேதி காலமானார்.

No comments:

Post a Comment